பக்கங்கள்

பக்கங்கள்

Arulmigu Rudhrakotiswarar Temple

 Arulmigu Rudhrakotiswarar Temple - Thirukalukundram  - Pakshi Thirtham

அருள்மிகு ருத்ரகோடீஸ்வரி உடனுறை  அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர்  திருக்கோவில் - திருக்கழுக்குன்றம் பட்சி  தீர்த்தம் 

      கோடி பாவங்ளை போக்கும் அருள்மிகு ஸ்ரீ ருத்திரகோடீஸ்வரர் தொண்டை வளநாட்டில் காஞ்சி மாநகருக்கு தென்கிழக்கில் திருக்கழுக்குன்றம் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரத்திலும், செங்கல்பட்டிலிருந்து 15 கி.மீ.தூரத்திலும் இச்சிவாலயம் அமைந்துள்ளது. திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் ருத்திகோட்டீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. 

 


திருக்கழுக்குன்றம் அருள்மிகு அபிராமி நாயகி உடனுறை  அருள்மிகு  ருத்ரகோட்டீஸ்வரர் தல வரலாறு.

 

         சுமார் 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயமாகும். மன்னர்களால் கட்டப்பட்டு போற்றி பாதுகாக்கப்பட்ட கலைப்பொக்கிஷமாக திகழ்கிறது.        திருக்கழுக்குன்றம் அருள்மிகு ஸ்ரீ அபிராமநாயகி உடனுறை அருள்மிகு ஸ்ரீ ருத்திரகோடீஸ்வரர் ஆலயம் வடிவமைப்பில் காளிங்க நர்த்தனர். கோயிலைக் கட்டிய மன்னர் மற்றும் மன்னர்கள் சிலர் உருவங்கள் மஹரிஷிகளின் உருவங்கள் தலையில் பலாப்பழம் சுமந்து நிற்கும் மனிதர். பல தூண்களில் பலவித வடிவங்களில் சிவலிங்கங்கள் விநாயகர், முருகர் தனது இருகைகளையும் தலைக்குமேல் கூம்பிட்டு வணங்கும் பானா, ருத்ரன் போன்ற சிறப்பம்சங்கள் பொருந்திய சியா ரூபங்கள் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன.
 
 



     இச்சிவாலயம் நால்வர் பெருமக்களில் திருநாவுக்கரசுப் பெருமானால் வைப்புத் தலமாக பாடல் பெற்ற ஆலயம் ஸ்ரீ ருத்ரகோடீஸ்வரர் ஆலயமாகும் ஸ்ரீ ருத்ர கோடிஸ்வரர் சுயம்புலிங்க மூர்த்தியாக உள்ளார். கோடி உருத்திரர்கள் தனித்தனியாக சிவலிங்கம் வைத்து பூஜித்த தலம் ஸ்ரீ ருத்திரகோடீஸ்வரர் தலமாகும்.
 
     திருக்கயிலையில் வாசம் செய்யும் எம்பெருமான் பரமேஸ்வரனிடம் திருநந்திதேவர் பூலோகத்தில் இருக்கின்ற உருத்திரகோடி தலத்தின் பெருமைகளை அறிய வேண்டி விக்ஞாபனம் செய்கிறார். எம்பெருமான் பரமேஸ்வான் இப்பூவுலகில் யாம் வசிக்கும் 25 தலங்களில் எம் இதய பாகமாக உருத்திர கோடி தலம் விளங்குகிறது என்றார்.

பூலோகத்தில் அசுரர்களை அழிப்பதற்காக சர்வேஸ்வரன் திருமேனியிலிருந்து பலம் பொருந்திய கோடி உருத்திரர்கள் தோன்றினர். அவர்கள் மிகுந்த தவபலம் பெற்றவர்கள். 32 ஆயுதங்களை ஏந்தியவர்கள் கோடி உருத்திரர்கள் சிவபெருமானை வணங்க இவ்வுலகத்தை காத்து நிற்க எம்பெருமான் ஆணையிட்டார்.

          தேவர்கள் அமுதம் பெற வேண்டி பாற்கடலைக் கடைவதற்கு மத்தாக மந்தார மலையைப் பெயர்த்தனர். அதன் பாதாளத்திலிருந்து கொடிய அசுரர் கூட்டத்தினர் திரளாக வெளிவந்தனர். பெருமளவில் குடிமக்களை அழித்தும், முனிவர்கள் தவத்தைக் களைத்தும், தேவர்களை துன்புறுத்தியும் முனிவர்கள், தேவர்கள், யோகிகள் அனைவரையும் அழித்து நாசமாக்குகிறார்கள் என்பதை அறிந்து பிரம்மன், இந்திரன், தேவமுனிவர்களுடன் திருக்கயிலை நாதனை துயரத்துடன் வேண்டி துதி செய்தனர். அரக்கர் கூட்டம் அழிவை ஏற்படுத்தி வானுலகம், பூவுலகம் அழியத் தொடங்கி விட்டன என்று சிவபெருமானிடம் வேண்டி நிற்க சிவபெருமான் கோடி உருத்திரர்களை அழைத்து அசுரர்களை அழிக்க ஆணை இடுகிறார். சிவபெருமானின் கட்டளையை ஏற்று அசுரர்களை கோடி உருத்திரர்கள் அடியோடு அழிக்கின்றனர்.

சிவபெருமானிடம் கோடி உருத்திரர்களும் அசுரர்களைக் கொன்ற பாவம் நீங்க வழி கேட்டனர். சிவபெருமானும் அதற்கு உருத்திரர்கள் ஒவ்வொருவரும் என்னை நித்தமும் தவமியற்றி அர்ச்சனை செய்து பூஜித்தால் எத்தகைய கொடிய பாவங்களும் நீங்கிவிடும் என்றார். #திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள வேதகிரி மலையே அதற்கு தகுந்த தலம் என்று சிவபெருமான் கூற கோடி உருத்திரர்களும் வேதமலையில் தவமியற்றி அர்ச்சனை செய்து பூஜித்ததன் பயனாக அவர்கள் அனைவரின் பாவங்களும் நீங்கப்பெற்றனர். உருத்திரர்கள் மஹாதேவனிடம் தங்கள் பெயரிலேயே தீர்த்தமும் தலமும் விளங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டனர். - அதன்படியே ருத்திரகோடிதலம் என்றும் ஈசனுக்கு #ருத்திர கோடீஸ்வர் என்றும் உமையவளுக்கு #ருத்திரகோட்டீஸ்வரி என்றும் தீர்த்தத்திற்கு ருத்ரகோடி தீர்த்தம் எனவும் பெயர் பெற்று விளங்கலாயிற்று.காசி அம்பலம் கமலை சோணாசலம் காஞ்சி மாசில் காளத்தி மதுரையம்பதி அங்க மோசையார் கால் கோடி ருத்திரர் வந்தியற்றும் பூசை மாத்தலம் நமக்கென்றும் இதய புண்டரிதம் என திருவாக்கு அருளினார். காசி மாநகர் தில்லை, திருவாரூர், காஞ்சிபுரம் குற்றமற்ற காளத்தி மற்றும் மதுரை போன்றவை எமது உடல் பாகமாக உள்ளது. ஓசையெழ ஒலிக்கின்ற கழல்களை அணிந்த கோடி ருத்திரர்கள் வழிபட்ட இவ்விடம் இதய பகுதியாகும். இங்கு எம்மை தரிசிப்பவர்கள் பெறும் பேற்றினை இம்மையிலும் மறுமையிலும் அடைவார்கள் என்றார் ஈசனார்.
 
 
 



        காழிக் காலத்தில் உலக உயிர்களை எல்லாம் தன்னுள் ஒடுக்கிய ஈசனை கயிலையில் காண்பதற்கு திருப்பாற்கடலிருந்து மஹாவிஷ்னு கருட வாகனத்தின் மீதேறி வந்தார். கயிலையின் முதற்கோபுர வாயிலில் தன் வாகனத்தை நிறுத்தி விட்டு நந்தியெம்பெருமானை வணங்கி உள்ளே பரமேஸ்வரனை தரிசிக்கிறார். சிவபெருமானும் தன்னை பணிந்து நிற்கும் மஹாவிஷ்ணுவை தன் அருட்பார்வையால் ஆசிர்வதிக்கிறார். அப்போது முன் கோபுர வாயிலில் இருந்த கருடாழ்வார் அகந்தையால் #நந்தியம் பெருமானை நோக்கி நீ இரந்து பிச்சை எடுத்து உண்பவன் வாகனம். நீ என்னை கோபித்து என்ன செய்ய முடியும் என கேட்டார். எல்லாம் வல்ல #சிவபெருமானை நிந்தித்து பேசியதாக நந்தியம்பெருமான் கடும் கோபம் கொண்டார். எல்லாம் திசைகளும் கலங்கியது தேவர்கள் திகைத்தனர். சிவநிந்தை செய்த கருடனை கொன்று விடுகிறேன் என்று நந்தியம்பெருமான் பெருமூச்சு விட்டார். அந்த மூச்சுக்காற்றில் கருடன் நூறு காத தூரம் உருண்டு போனார். மீண்டும் நந்திதேவர் மூச்சுக் காற்றை உள்ளிழுக்க நாசி துவாரத்தில் வருந்தியது கருடன். அப்படியும் கருடனின் அகந்தை அடங்கவில்லை. நந்தியின் சுவாசக் காற்றோ உலகம் அழியும்போது உண்டாகும் காற்றினைப்போல் கருடனைத் தூக்கி வீசியது. கருடனின் உடல் நொறுங்கியது. சிறகுகள் ஒடிந்தன. கருடன் செய்வதறியாது கலங்கி நந்தியின் மகிமையை அறியாமல் கெட்டேனே நாராயணா | வாசுதேவா | கமலக்கண்ணா என்று ஓலமிட என்னை காப்பாற்று என கதறிய கருடனின் குரல் கேட்ட மஹாவிஷ்ணுவிற்கு விபரீதம் புரிந்து விட்டது.
 
மஹாவிஷ்னு பரமேஸ்வானிடம் கருடன் அகங்காரத்தால் நந்தியெம்பெருமானின் கோபத்திற்கு ஆட்பட்டு கஷ்டப்படுகிறான். தேவரீர் உளம் கனிந்து கருடனை மன்னித்து விடுவிக்க நந்திதேவருக்கு உத்திரவிடவேண்டும் என வேண்ட,சிவபெருமான் நந்தியெம்பெருமானை அழைத்து கருடன் அறியாமல் செய்த குற்றத்தை மன்னித்துவிடச் சொன்னார். ஆனால் நந்தியம்பெருமான் சிவபெருமானை நிந்தித்த கருடனை விடேன் என்று கூறினார்.
 
 


       சிவபெருமான் கட்டளையை மறுத்துக் கூறியதால் சிவ அபராதத்திற்கு ஆளாகி விட்டோமோ என்று சிவனிடம் நந்திதேவர் சிவகட்டளையை மீறிய பாவம் நீங்க வழிசொல்ல வேண்டும் என்று வேண்டுகிறார். நந்தியம்பெருமான் செய்த சிவ அபராதத்திற்கு பூலோகத்தில் உருத்திரகோடி தலத்திற்கு சென்று அங்குள்ள #உருத்திர கோடிஸ்வாரை வில்வத்தால் அர்ச்சிக்கால் சிவ அபராதம் நீங்கும் என்றார். அதன்படி நந்திதேவரும் வில்வத்தால் சிவபெருமானை அர்ச்சித்து சிவஅபராதம் நீங்கப்பெற்று பரம்பொருளின் அண்மையை அடைகிறார். அதற்கு அடையாளமாக இன்றும் இந்த ஆலய கோபுரத்தின் கற்கார சுவற்றில் பெருநந்தி தேவனார் மற்றும் சுயம்பிரபை தேவியும் கைகூப்பியபடி வீற்றிருக்கும் புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.
 


    ருத்திரகோடி ஆலயத்தில் வாயிலில் உள்ள பெரிய நந்திதேவரின் முன்புறம் நுழைவு வாயிலின் ஓரம் சுமார் ஒன்றரை அடி உயரம் பூமியில் புதையுண்ணட கருடாழ்வார் சிலையைக் காணலாம்.
 
 

இச்சிவாலயத்தின் தல விருட்சம் வாழைமரம். ஆலயத்தில் பத்ராட்ச மரம் உள்ளது. இந்த மரம் காய்ப்பதில்லை. பூக்கள் மட்டும் பூக்கிறது. இந்த மரம் உருத்திராட்ச பரத்தின் வகையைச் சார்ந்ததாகும். திருக்கழுக்குன்றம் மலைமீது வேதகிரீஸ்வரர் ஆலயமும் கீழே பக்தவச்சலேஸ்வரர் ஆலயமும், தீர்த்தகிரீஸ்வரர் ஆலயமும், 2 கி.மீட்டர் தூரத்தில் ருத்திரகோடிஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளது. இந்த நான்கு ஆலயங்களின் தல விருட்சம் வாழை மரமாகும். நாம் ஒருமுறை செயத தானத்தையும், ஜெபத்தையும் கோடிமுறை செய்த பலனாக நமக்குத் தருபவர் ருத்ரகோடீஸ்வரர்.


 




அருள்மிகு  ருத்ரகோட்டீஸ்வரர்திருக்கோவில் அமைப்பு

      தேவ கோஷ்டத்தில் ஸ்ரீ நர்த்தன கணபதி, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஸ்ரீ மஹாவில் பிரம்மதேவர் ஸ்ரீ தூர்க்கை போன்ற கோஷ்ட மூர்த்திகள் அமைந்து அருள்பாலிக்கின்றனர், சண்டிகேஸ்வரர் சந்நிதியில் கம்பீரமான தோற்றத்துடன் அருள்பாலிக்கிறார். பைரவர் பெருமான் நாய் வாகனத்துடன் அற்புதக் கோலத்துடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். சுவாமியின் மூலஸ்தானத்தின் பின்புறம் கன்னிமூல கணபதியும், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ ஷண்முகப்பெருமாளும் அருள் கூட்டுகின்றனர்.


      மஹா மண்டபம் மிகவும் பெரிய மண்டபமாக விளங்குகிறது. சூரியன், சந்திரன் இருவரும் அருள்பாலிக்கின்றனர். அர்த்தமண்டபம் அந்தரானம் கருவறை அமைப்புடன் மூலவர் ஸ்ரீ ருத்ரகோடஸ்வரர் திருவருள் கூட்டுகிறார். அம்பிகை தெற்கு நோக்கி அபிராமிநாயகியாக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். வெளியே நந்தி மண்டபம் அழகுற அமைந்துள்ளது. ஆலய வெளிச்சுவற்றில் புடைப்பு சிற்பமாக நந்திதேவர் சுயம்பிரபை தேவியுடன் அருளுகிறார். ஸ்ரீ நந்திகேஸ்வரர் சந்நிதிக்கு எதிரில் நந்தியெம்பெருமானின் மூச்சுக்காற்றால் பூமியில் புதைந்திருக்கும் கருடாழ்வார் வீற்றிருக்கிறார். நான்கு நிலை இராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. 

 

 

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

www.thirukalukundram.in